திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டி செம்மேடு பகுதியில் சின்ன தம்பி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சின்னத்தம்பியும் அவருடன் கூலி வேலை பார்க்கும் அன்பழகன்(30) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் மேட்டுப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அந்த பகுதி மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.