தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கரந்தை அருகே 31 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதனை நம்பி வாலிபர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு 21 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் லாபத்தை கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.