கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை ரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விஜயகுமார். இந்நிலையில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி கொடுப்பதுடன் வீடு கட்டி கொடுக்கப்படும் என இந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவரை நம்பி ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜாமணி உட்பட பலர் கடந்த 2019-ஆம் ஆண்டு விஜயகுமார் உள்பட 3 பேரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி நிலமோ அல்லது வீடோ கட்டி கொடுக்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது எந்த பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தினர். இதனால் பணம் கொடுத்தவர்கள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விஜயகுமார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 3 பேரும் 16 பேரிடம் 76 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் நேற்று விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.