கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.நல்லி கவுண்டன் பாளையத்தில் கணவரை இழந்த ரங்கநாயகி என்பவர் வசித்து வருகிறார். இவரது ஒரே மகள் மகேஸ்வரிக்கு(38) சரவணகுமார்(41) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்தார். இதனை ரங்கநாயகி கண்டித்தார். கடந்த 17-ஆம் தேதி சரவண குமாருக்கும் மகேஷ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று சரவண குமாருக்கு பிறந்தநாள்.

அந்த நாளிலும் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என கேட்டு மகேஸ்வரி தனது கணவரை கண்டித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.