கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஆலடி சாலை காமராஜர் நகரில் வசந்தி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் நகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களுக்கு வசந்த் முன்பு ஸ்ரீவித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வசந்தும் அவரது பெற்றோரும் ஸ்ரீ வித்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து பெற்றோர் வீட்டிற்கு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி ஸ்ரீவித்யா விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வசந்த் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஸ்ரீவித்யாவை ஏற்றுக் கொள்வதாக கூறி வசந்த் போலீசாரிடம் தெரிவித்து எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

நேற்று ஸ்ரீவித்யா வசந்தின் வீட்டிற்கு சென்ற போது அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் மாமியார் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாக தெரிகிறது. இதில் கோபமடைந்த ஸ்ரீவித்யா வீட்டிற்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் ஸ்ரீவித்யா, அவரது மாமனார், வசந்த் ஆகியோரே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.