ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோயில் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர்னி (17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இவர் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் கேணிக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பூசேரி கிராமத்தைச் சேர்ந்த சத்யா (17) என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்திருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்‌. இதனால் வீட்டில் சத்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.