சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் டேனியல் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி டேனியல் குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் இருக்கும் நண்பர் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு 11 மணிக்கு டேனியலும் மணிகண்டனும் மது குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது மணிகண்டன் டேனியலிடம் நீ வீட்டிற்கு செல்வது தான் நல்லது என அறிவுரை கூறியுள்ளார். அதற்கு நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன், செத்தாலும் சாவேன் என டேனியல் கூறியதாக தெரிகிறது. இதனால் மணிகண்டன் மாடியில் டேனியலை படுக்க வைப்பதற்காக பாய், தலையணைகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் போதை தலைக்கேறியதால் டேனியல் தெருவில் உள்ள மின் கம்பிகள் மீது குதித்தார். இதனால் மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் மின்கம்பியில் தொங்கிய டேனியலை மீட்டு பரிசோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.