மும்பையில் நிலவி வரும் கடுமையான வெயிலின் காரணமாக, இரவிலும் வீடுகளில் தாங்க முடியாத புழுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் நிம்மதியான தூக்கத்திற்காக வெர்சோவா கடற்கரையில் குவிந்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் ஜூன் மாதம் முடியப் போகும் நிலையிலும் மும்பையில் வெயிலின் தாக்கம் குறையாமல், காற்றின் ஈரப்பதம் காரணமாக பகல், இரவு என இரு நேரங்களிலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏசி மற்றும் மின்விசிறிகள் இருந்தும் வீடுகளுக்குள் இருக்க முடியாத சூழ்நிலை நிலவுவதால், குறிப்பாக குடிசைப் பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் இந்த சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க கடற்கரையைத் தஞ்சமடைந்துள்ளனர்.

“>

இந்த இரவு நேரத்தில் கடற்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் படுக்கைகளை விரித்து, மணலில் வரிசையாக தூங்கும் காட்சிகள் பார்ப்போரை வியப்பிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அங்கு தூங்கும் நபர் ஒருவர் கூறுகையில், வீடுகளுக்குள் இருக்கும் கடும் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் தினமும் இரவு கடற்கரைக்கு வருவதாகவும், கடல் நீரால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் இங்கு நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வழக்கமாகப் பகலில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிக் காணப்படும் மும்பை கடற்கரைகள், தற்போது இரவிலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதற்குக் காரணம் இந்தத் தாளாத வெயில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பை மக்கள் அனைவரும் இந்த வெப்பத்திலிருந்து தங்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும், பருவமழை எப்போது பெய்யும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.