புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூரில் ஜெகன்மோகன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் நர்மதா செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நர்மதாவின் சித்தி பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகனும் நர்மதா படிக்கும் அதே பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நர்மதா தனது சித்தி மகனை கருப்பட்டி என அழைத்ததால் சிறுவன் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் பிரம்பால் நர்மதாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அழுது கொண்டே வீட்டிற்கு வரும் வழியில் நர்மதா மயங்கி விழுந்தார். இதுகுறித்து அறிந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று தனது மகளை ஆசுவாசப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து நர்மதா ஜெகன்மோகனிடம் இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறி அழுதுள்ளார். மேலும் நர்மதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.