நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூரில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோ மற்றும் வேன் ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சசிகலா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திவித் (5), தர்ஷன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தனசேகரன் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தனசேகரன் வழக்கம் போல தனது மனைவியுடன் தகராறு செய்தார். இதுகுறித்து அறிந்த சசிகலாவில் தந்தை பழனிசாமி மகளின் வீட்டிற்கு சென்று வா, நமது வீட்டுக்கு போகலாம் என கூறினார். அதற்கு சசிகலா இல்லை, நீங்கள் கிளம்புங்கப்பா. நான் காலையில் வருகிறேன் என கூறியுள்ளார். இதனால் சசிகலாவின் தந்தை ஊருக்கு சென்று விட்டார்.

இதனையடுத்து தனது கணவர் தகராறு செய்ததை நினைத்து மன உளைச்சலில் இருந்த சசிகலா மொபட்டில் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றிற்கு சென்றார். அங்கு இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு வருவதாக கூறிய மகள் வராததால் சந்தேகமடைந்த பழனிச்சாமி வெட்டுக்காட்டு புதூருக்கு சென்று பார்த்தார்.

அப்போது தனசேகரன் தூங்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த பகுதியில் தேடி பார்த்த போது கிணற்றில் சசிகலாவும் இரண்டு குழந்தைகளும் சடலமாக மிதந்ததை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.