தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் மேலத்தெருவில் வசிப்பவர் கோதண்டராமன். இவருக்கு சண்முகராஜ் (52), விஜயகுமார் (44), முத்துராஜ் (40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டராமன் தனக்குச் சொந்தமான தோட்டத்தை சண்முகராஜ் மற்றும் முத்துராஜின் பிள்ளைகளுக்கு தான் சொந்தம் என்று செட்டில்மென்ட் எழுதி கொடுத்துள்ளார்.

எனவே இதைபற்றி கேள்விப்பட்ட விஜயகுமார் ஓர் ஆண்டு காலமாக, தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முகராஜ் மற்றும் முத்துராஜ் ஆகிய இருவரும் தோட்டத்தில் இருந்ததை அறிந்த விஜயகுமார் அங்கு சென்றுள்ளார். மேலும் அவரது  உறவினர் ஆணஸ்ட்ராஜ் (29) என்பவரும் அவருடன் சென்றுள்ளார். அதன்பின் அவர்கள் இருவரும் சேர்ந்து சண்முகராஜ் மற்றும் முத்துராஜை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பியோடி விட்டார்கள்.

இதில் படுகாயமடைந்த  சண்முகராஜ் மற்றும் முத்துராஜ் ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த  போலீசார்  விஜயகுமார் மற்றும் ஆணஸ்ட்ராஜ்  இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.