தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கல்நாயக்கன் பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து கயிறு இழுக்கும் போட்டிகளில் மாமியார், மருமகள்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் வாலிபர்கள் ஒரு கிலோ சில்லி சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிடும் “சாப்பாட்டு ராமன் போட்டி” நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றிவேல் என்பவர் கலந்து கொண்டு 1 கிலோ சில்லி சிக்கனை 10 நிமிடத்தில் சாப்பிட்டு போட்டியில் வெற்றி பெற்றார். இதேபோல் பிரியாணி சாப்பிடும் போட்டியில் கஜேந்திரன் என்பவர் முதல் பரிசை பெற்றுள்ளார். மேலும் அரை கிலோ ஐஸ்கிரீமை 7 நிமிடத்தில் சாப்பிட்டு ராஜ்குமார் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றவர்களுக்கு ஊர் கவுண்டர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவி சுமதி காளியப்பன் ஆகியோர் பரிசுகளை வழங்கியுள்ளனர்.