கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரான்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும், சபர்ணா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் தான்தோன்றிமலைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் சென்ற போது பள்ளப்பட்டி நோக்கி வந்த மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. மேலும் மோட்டார் சைக்கிளை இழுத்து சென்றபடி வேன் பள்ளத்தில் பாய்ந்தது.

இந்த விபத்தில் பிரபாகரன், வீரம்மாள், பிரணவ், சபர்ணா, வேனை ஓட்டி வந்த சாதிக் பாஷா, அவரது மனைவி மும்தாஜ் ஆகிய 6 பெரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு குஜிலியம்பாறையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.