அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர் லெப்ரன் ஜேம்ஸ் ஆகிய இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த மோதலை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் ஒரு பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கூடைப்பந்து வரலாற்றிலேயே மிகச்சிறந்த வீரர் (GOAT) யார் என்ற விவாதம் எழுந்தபோது, மைக்கேல் ஜோர்டான்தான் உலகின் சிறந்த வீரர் என்று டிரம்ப் புகழ்ந்து தள்ளினார். அதேவேளையில், லெப்ரன் ஜேம்ஸ் குறித்துப் பேசுகையில், “அவர் ஒருவேளை இனவெறியாளராக இருக்கலாம் அல்லது அவருக்கு என்னைப் பிடிக்காமல் இருக்கலாம்” என்று எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லாமல் அதிரடியாகக் கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிரம்ப், மைக்கேல் ஜோர்டான் தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்றும் அவருடன் தான் கோல்ஃப் விளையாடியுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார். ஆனால், லெப்ரன் ஜேம்ஸை தனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும் அவர் தன்னை விமர்சிப்பதாலேயே தன் மீது கோபத்தில் உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். டிரம்ப் முன்பு அதிபராக இருந்த காலகட்டத்திலிருந்தே, அவரது அரசியல் மற்றும் சமூகக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்து வந்தவர் லெப்ரன் ஜேம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இருவருக்கும் இடையேயான மோதல் அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் எப்போதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

 

இந்தச் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாவதற்கு  ஒரு நாளுக்கு முன்புதான், லெப்ரன் ஜேம்ஸ் தனது நீண்ட கால விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக, தனது 24-வது என்.பி.ஏ சீனுக்காக ‘பிலடெல்பியா 76ers’  அணியில் ஒப்பந்தம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தனது புகழின் உச்சத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், திடீரென அமெரிக்க அதிபர் டிரம்ப் இவரைக் குறிவைத்து இனவெறியாளர் என்று கூறியிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் இந்தப் பேச்சுக்கு லெப்ரன் ஜேம்ஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும், உலகின் மிகப்பிரபலமான ஒரு விளையாட்டு வீரரையும், நாட்டின் அதிபரையும் இணைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. விளையாட்டும் அரசியலும் எப்போதுமே பிரிக்க முடியாதவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.