திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பச்சையாறு அணை பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் விவசாயிகள் வாழைகளை பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக கரடி, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் மஞ்சுவிளை பகுதியை சேர்ந்த விவசாயியான இஸ்ரவேல்(55) என்பவர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வந்த கரடி அவரை பாய்ந்து துரத்தியது.

இதனையடுத்து தவறி விழுந்த இஸ்ரவேல் சத்தம் போட்டதால் அருகில் இருந்த தோட்ட விவசாயிகள் ஓடி வந்தனர். அதற்குள் கரடி அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் காயமடைந்த இஸ்ரவேலை மீட்டு களக்காடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, அட்டகாசம் செய்யும் வனவிலங்குகளை விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.