ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில், பணிபுரிந்த பெண் செவிலியர் ஒருவர் அதே மருத்துவமனையின் 65 வயது மூத்த மருத்துவரை மிரட்டி சுமார் 2 கோடி ரூபாய் வரை பறித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் இரவு நேரப் பணியில் சேர்ந்த கமலா என்ற அந்தச் செவிலியர், மருத்துவரின் மொபைல் போனில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை அவருக்குத் தெரியாமல் தனது போனுக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், பொய் பாலியல் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டி, கடந்த சில ஆண்டுகளாகவே கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார்.

மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது வங்கிக் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலமாக மட்டும் சுமார் 35 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டதும், மீதிப் பணம் ரொக்கமாகவும், கையெழுத்திடப்பட்ட காலியான காசோலைகள் மற்றும் பத்திரத் தாள்களாகவும் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது. அத்துடன் நிற்காமல், மருத்துவமனை சிசிடிவி கேமராக்கள் மூலம் மருத்துவரைத் தொடர்ந்து கண்காணித்த செவிலியர், அவருக்குத் தனியாக ஒரு மொபைல் போன் மற்றும் சிம் கார்டு கொடுத்து எந்நேரமும் அதன் இருப்பிடப் பதிவை  ஆன் செய்து வைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். தன் குடும்ப மானத்திற்கும் மருத்துவமனையின் பெயருக்கும் களங்கம் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே இத்தனை ஆண்டுகளாகப் பணத்தைக் கொடுத்து வந்ததாக மருத்துவர் தனது புகாரில் கதறியுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகக் காவல்துறையினர் அழைத்து வந்தபோது, செவிலியர் கமலா வெளியிட்ட வீடியோ செய்தி இந்த வழக்கின் போக்கையே முற்றிலும் மாற்றியுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “அந்த மூத்த மருத்துவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைச் சீரழித்த ஒரு தொடர் பாலியல் குற்றவாளி” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மருத்துவமனைக்கு வரும் பெண் நோயாளிகளை அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், அவருக்குப் பெண்களை அழைத்து வர இரு ஊழியர்கள் உதவியதாகவும் கூறிய செவிலியர், ஏற்கனவே இதுகுறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார்கள் பண பலத்தால் மூடி மறைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தன் மீதான வழக்கு தன்னை அமைதிப்படுத்த போடப்பட்ட பொய் வழக்கு என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.

  1. தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள அந்தச் செவிலியர், விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்காமல் அதிகாரிகளைத் திசைதிருப்ப முயல்வதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முன்னாள் அரசியல் வேட்பாளரான இவர், தன் கணவரைப் பிரிந்து வாழ்வதோடு அவர் மீதும் வரதட்சணை வழக்கு தொடர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. செவிலியர் சுமத்தியுள்ள கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், இரு தரப்பின் மின்னணு ஆதாரங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.