தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மந்திர பீடேஸ்வரி என அழைக்கப்படும் மங்களாம்பிகை அம்பாள் உடனாகிய ஆதிகும்பேஸ்வர ஸ்வாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் உடைய இந்த கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மக பெருவிழா நடைபெறுகிறது. அதேபோல் வருடம் தோறும் இந்த கோவிலில் மாசி மக திருவிழாவும் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருட மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 6.30 மணிக்கு அனுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து நாளை காலை திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அதேபோல் வருகிற 28-ஆம் தேதி அறுபத்துமூவர்  விழாவும் ஒன்றாம் தேதி தன்னைத்தான் பூஜித்தல் மற்றும் ஓலைச் சப்பரம்  வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 4 மற்றும் 5-ம் தேதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி மகாமக குளத்தில் வருகிற 6-ம் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து எட்டாம் தேதி விடையாற்றி உற்சவமும், 9-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் சுத்தாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.