பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன்ராஜ், கார்த்திக் என்ற மகன்கள் இருக்கின்றனர். மூர்த்தி ராணி தம்பதியினர் ஊர் ஊராக சென்று கூடை பின்னியும் மூங்கில் வேலி அமைத்தும் அந்த வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் பாலம்பாடி பகுதியில் இருக்கும் முட்புதரில் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ராணி சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராணி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மூர்த்தியின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது மூர்த்தி கூறியதாவது,  ராணி மகளிர் சுய உதவி குழுவிற்கு கட்ட கொடுக்கும் பணத்தை கட்டாமல் செலவு செய்து விடுகிறார். அந்த குழு ஏஜென்ட் என்னை தொடர்பு கொண்டு பணம் கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானேன். மேலும் மனைவி தன்னிடம் நெருக்கமாக இல்லாததால் சந்தேகப்பட்டு காட்டுப் பகுதியில் வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.