செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை மாதவரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை நோக்கி புதுச்சேரிக்கு புருஷோத்தமன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் தங்களுடைய நண்பர்களான நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கல்பாக்கம் அருகே சாலையில் உள்ள மேம்பால சுவரின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, கிஷோர், நிர்மல், கார்த்திக் மற்றும் நரேஷ் ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.