வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவிசெட்டிகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஹேமலதா தான் கருவுற்ற மூன்றாவது மாதம் முதல் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 26 நாட்களுக்கு முன்பு ஹேமலதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மணிகண்டன் தனது குழந்தையை பார்க்க ரெட்டியூரில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து குழந்தை என்னை போல் இல்லை. குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபத்தில் பிளேடால் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையில் அறுத்துவிட்டு மணிகண்டன் தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த குழந்தையை அடக்கமாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனையும், உடந்தையாக இருந்த குழந்தையின் பாட்டி லட்சுமியையும் கைது செய்தனர்.