கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார்(35), வின்சென்ட்(40) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன், தம்பி இருவரும் அம்மேரி கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது விற்பனையாளர் மது பாட்டிலின் விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் கேட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த சுகுமாரும், வின்சென்ட்டும் இணைந்து விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காலி மது பாட்டில்களை எடுத்து டாஸ்மாக் கடையின் மீது வீசி ரகளை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட அண்ணன் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.