திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ராம்நகர் பகுதியில், நேற்று புதன்கிழமை மதியம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. சங்கத் சௌமுஹானி அருகிலுள்ள ‘என்.எஸ் அபார்ட்மெண்ட்’ (NS Apartment) கட்டிடத்தின் முதல் மாடியில், மதியம் 12:00 மணியளவில் யாரும் எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் இந்த வெடிவிபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தின் தாக்கம் எந்த அளவுக்குக் கொடூரமாக இருந்தது என்றால், ஒட்டுமொத்தக் கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சிதறியதுடன், முதல் மாடிப் பகுதி மிகக் கடுமையான சேதத்திற்குள்ளாகி அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்துள்ளது.

​இந்த பயங்கர வெடிவிபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில் அங்கு நின்றிருந்த பெண் ஒருவரின் கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஜி.பி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேலும் முதல் மாடியில் இருந்த வாலிபர் ஒருவரும் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்குத் தீயணைப்புப் படை, போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு (Bomb Squad) விரைந்து வந்து, அப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்து கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதிவேலையா என்பது குறித்துத் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.