டெல்லியின் நரேலா பகுதியில் வியாழக்கிழமை இரவு திறந்தவெளி சாக்கடைக் கால்வாயில் விழுந்து சூரஜ் என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. செக்டார் A5 பகுதியைச் சேர்ந்த சூரஜ், நள்ளிரவில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக மூடப்படாமல் இருந்த ஆழமான சாக்கடைக்குள் விழுந்துள்ளார்.

கால்வாய் மிக ஆழமாக இருந்ததன் காரணமாக, இரவு நேரத்தில் அவரை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் பல மணி நேரம் சாக்கடைக்குள்ளேயே அவரது உடல் கிடந்த நிலையில், மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில்தான் அவரது சடலம் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

​இந்தக் கொடூரச் சம்பவம் நரேலா பகுதி மக்களிடையே டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (DDA) எதிராகப் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடைகளால் ஏற்கனவே பலமுறை விபத்துகள் நடந்துள்ளதாகவும், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் அடிக்கடி இதில் விழுந்து தவிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் இந்த அலட்சியமே சூரஜின் மரணத்திற்குக் காரணம் என்றும் கூறி, உடனடியாக அனைத்து திறந்தவெளி சாக்கடைகளையும் மூட வேண்டும் என மக்கள் அதிரடி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.