சென்னை மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் கற்பக ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் ரமேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்தி தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த நபர் கூறிய படி ரமேஷ் தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை அவரிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் ரமேஷ் வங்கி கணக்கிலிருந்து 1 1/2 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணத்தை மோசடி செய்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், ரவிக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.