திருச்சி மாவட்டத்தில் உள்ள நெ.1 டோல்கேட் மாருதி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மருத்துவத்துறையில் மயக்கவியல் பிரிவில் வேலைக்காக நந்தினி பிரபல இணையதளத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் நந்தினியை தொடர்பு கொண்ட நபர் ஏர் ஏசியா விமான நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த நபர் கூறியதை நம்பி நந்தினி 1 லட்சத்து 3 ஆயிரத்து 947 ரூபாய் பணத்தை கியூ ஆர் கோடு மூலம் அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்தினி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.