சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் வசிக்கும் 35 வயதான இளம்பெண் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக கடந்த 2017-ஆம் ஆண்டு பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன் அருள்மாறன்(35) என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.

அப்போதுதான் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் கடந்த 2021-ஆம் ஆண்டு அவரை பிரிந்து வந்து விட்டேன். இதற்கிடையே தொழில் தொடங்க போவதாக கூறி ஜான்சன் என்னிடமிருந்து 19 கிராம் தங்க நகை, 10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டார். தற்போது பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜான்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.