கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈசாந்திமங்கலம் நடுத்தெருவில் சுடலை முத்துப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தானம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். இவர்களது மகனிடம் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த தானம்மாள் குமாரை தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் கோபமடைந்த குமார் மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த மூதாட்டி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.