கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு  வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர்பட்டது. அதற்கான ஆணை வழங்கும் விழா அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இந்நிகழ்வு  கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் 353 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணையை  கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கிய பின் பேசியுள்ளதாவது, தமிழக முதல்-அமைச்சர் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெறப்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதன்படி இந்த மாவட்டத்தில் உள்ள 68 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 1 நகர கூட்டுறவு வங்கி, 3 மலைவாழ்மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 10 கிளைகள் ஆகிய 82 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு நிலுவையில் இருந்த மகளிர் சுயஉதவிக்குழுவிற்கான  கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி தகுதி பெற்ற 1,407 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் 15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு, ரூ. 15 கோடியே 54 லட்ச கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை பதிவாளர் (பொது வினியோகதிட்டம்) சுரேஷ், துணை பதிவாளர் முதன்மை வருவாய் அலுவலர் (விழுப்புரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி) சுகந்தலதா, பொது மேலாளர் (விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.