மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா மாவட்டத்தில் லேபா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து குப்பைகளை கொட்டுவது தொடர்பாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் முற்றியதால் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி உள்ளனர்.

அதன் பிறகு கஜேந்திர சிங்கின் வீட்டை தீர்சிங் குடும்பத்தினர் சேதப்படுத்தியதோடு அவர்கள் குடும்பத்தினர் 6 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாதாரண நிலத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.