
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று துவங்கியது. மேலும் மாட்டு பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது. அந்த வரிசையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதனை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 989 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மேலும் 490 காளையர்கள் களம் கண்டனர். இதில் 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.
இதில் பூவந்தி பகுதியை சேர்ந்த அபி சித்தர் 20 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு நாட்டு பசுவும், கன்றும் கூடுதலாக பரிசாக வழங்கப்பட்டது. கடந்த இதே ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியிலும் இவரே முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 13 காளைகளை அடக்கி பொதும்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது. மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு பரிசாக பைக் வழங்கப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து அஜய் 9 காளைகளை அடக்கி நான்காம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு TVS XL பரிசாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சேலம் பாகுபலி மாட்டின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.