திண்டுக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை  கிருபாகரன் (36) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கிருபாகரனுக்கு திடீரென நெஞ்சுவலி  ஏற்பட்டதால் பேருந்தை சமாளித்து ஓட்டி சாலையோரமாக நிறுத்தினார்.

சிறிது நேரத்தில் கிருபாகரன் மயங்கி விழுந்ததை பார்த்த  பயணிகள் அவரை மீட்டு உலுப்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓடும் பேருந்தில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதும் கிருபாகரன் சுதாரித்து கொண்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.