மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லாத பட்சத்தில், வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அவர்களாகவே வீடு கட்டிக் கொள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

அப்படி இல்லை என்றால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறுவதற்கு 4 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும். அவர்கள் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும் மேலும் மூன்று வருடங்கள் தொடர்ந்து அதனை புதுப்பித்திருக்க வேண்டும். இதனையடுத்து சம்பந்தப்பட்ட கட்டுமான தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தினருக்கு வேறு எங்கும் கான்கிரீட் வீடுகள் இருக்க கூடாது.

முக்கியமாக அவர் அரசின் வேறு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனடைந்தவராக இருக்க கூடாது. மேலும் தொழிலாளியின் பெயரில் வீட்டுமனை பட்டா அல்லது கட்டுமான தொழிலாளி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இருக்கும் கூட்டு பட்டாவாக இருக்க வேண்டும். தகுதி உள்ள கட்டுமான தொழிலாளர்கள் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.