நேபாள நாட்டுக்குச் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்த பேருந்து, எதிர்பாராத விதமாக மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்துக்குமார், மீனாட்சி, சிவகாமி, விஜயாள், தமிழரசி மற்றும் மீனா ஆகியோர் இந்த கோர விபத்தில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 9 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு நேபாளத்தில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாவுக்காகத் திட்டமிட்டு மகிழ்ச்சியுடன் சென்ற பயணிகளின் வாழ்வு, நேபாளத்தின் அபாயகரமான மலைப்பாதையில் முடிவுக்கு வந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்த உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நிலையை அறிந்து கொள்ள முடியாமல் கதறித் துடிக்கின்றனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழக அரசுக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
