சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் வெங்கடாசலம் முதலி தெருவில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளை தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானை சேர்ந்த மாங்கிலால், சென்னையை சேர்ந்த குரு பிரசாத் ஆகிய இருவரும் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் விமல் குமார் கடையின் கணக்கு விவரங்களை சரிபார்த்தபோது 4 1/2 கிலோ தங்க நகைகள், 50 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதற்கிடையே இரண்டு ஊழியர்களும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து விமல்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் ஊழியர்கள் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் குரு பிரசாத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மாங்கிலாலை தேடி வருகின்றனர்.