உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையோர உணவகத்தில், தனது காதலியுடன் பருப்பு மக்கானி சாப்பிட்டு மகிழ்ந்துக் கொண்டிருந்த கணவரை அவரது மனைவி திடீரென அங்கு வந்து கையும் களவுமாக பிடித்துள்ளார்.

“வீட்டில் உப்பில்லாத காய்கறி தான் எனக்கு… இங்கே காதலியுடன் சொகுசா தால் மக்கானி சாப்பிடறாரு!” எனக் கூறிய மனைவி கடும் கோபத்துடன் காதலியை தாக்கியுள்ளார்.

பில்குவா பகுதியைச் சேர்ந்த அந்த நபர், உணவகத்தில் இருந்தபோது யாரோ ஒருவர் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்து காதலியை அடித்து தாக்கியுள்ளனர்.

இந்த சண்டையால் சாலையோர மக்கள் அங்குக் கூடிய நிலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உணவக ஊழியர்களும் இந்த சண்டையில் தலையிட்டு நிலைமையை சமாளிக்க முயன்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான தகவலைப் பெற்ற போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பில்குவா டிஎஸ்பி அனிதா சவுகான் தெரிவித்ததாவது, “அமைதியை சீர்குலைத்ததற்காக இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கூறினார். இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகப் பரவி வருகின்றன.