திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு வாகைகுளம் பகுதியில் ஜெயராம்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உச்சி மாகாளி(18) என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் மானூர் அரசு கலை கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அழகிய பாண்டியபுரம் ஆற்றுப்பாலம் பகுதியில் சென்றபோது நெல்லை நோக்கி வந்த வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயராம், உச்சிமாகாளி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.