திருச்சி மாவட்டத்தில் உள்ள மாகாளிப்பட்டியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு துர்கா தேவி வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் துர்கா தேவி பள்ளிக்கு செல்லாமல் வாலிபர் ஒருவருடன் பேசியதாக தெரிகிறது. இதனை பார்த்து செல்வி தனது மகளை கண்டித்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல செல்வி வேலைக்கு சென்ற பிறகு துர்கா தேவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நீண்ட நேரமாக அறை கதவு திறக்காமல் இருந்ததால் துர்கா தேவியின் சகோதரி கதவைத் திறந்து பார்த்தார். அப்போது துர்கா தேவி தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தெரியாமல் துர்கா தேவியின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.