தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளமான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT), தற்போது நீதிமன்ற வழக்கிலும் ஒரு நபருக்கு வெற்றி பெற்றுத் தந்து புதிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த டேவிட் ஹிண்ட்ஸ் என்பவருக்கு அரசு வழங்கிய வேலைவாய்ப்பற்றோருக்கான நிவாரணத் தொகையில் ஏற்பட்ட சிறிய குளறுபடி காரணமாக, கூட்டாட்சி வேலைவாய்ப்பு முகமையால் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க வழக்கறிஞரை அணுக பணமில்லாத நிலையில், அவர் சாட்ஜிபிடி உதவியை நாட தீர்மானித்தார்.

வேலை கிடைத்தவுடன் உடனடியாகத் தன் நிலையை அரசு முகமைக்கு தெரிவித்த போதிலும், எதிர்பாராதவிதமாக கணக்கில் மேலதிகமாகச் சேர்ந்த 242 யூரோக்கள் (சுமார் ₹22,000) தொகையைக் காரணம் காட்டி அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாட்ஜிபிடி தளத்தில் தனது வழக்கு குறித்த முழு விபரங்களையும் உள்ளீடு செய்த டேவிட், தனது சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் அதற்குரிய சட்டப் பிரிவுகள் குறித்து ஆலோசனைகளைப் பெற்றார். செயற்கை நுண்ணறிவின் வழிகாட்டுதலின்படி, தனக்காகத் தானே வாதாடும் வகையில் 18 பக்கங்கள் கொண்ட மிகத் துல்லியமான பதில் மனு ஒன்றையும் தயாரித்தார்.

அந்த 18 பக்க மனுவை ஆய்வு செய்த நீதிமன்றம், டேவிட் தரப்பில் எவ்விதத் தவறும் இல்லை என்பதையும், அரசுத் துறையின் குளறுபடியே காரணம் என்பதையும் ஏற்றுக்கொண்டு அவர் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை முற்றிலும் தள்ளுபடி செய்தது. ஒரு வழக்கறிஞரின் கட்டணமும் இன்றி, சாட்ஜிபிடி அளித்த துல்லியமான சட்ட ஆலோசனைகள் மூலம் டேவிட் ஹிண்ட்ஸ் இந்த வழக்கில் முழு வெற்றி பெற்றுள்ளார். ஜெர்மனி நாட்டின் நீதித்துறை வரலாற்றிலேயே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கறிஞர் இன்றி ஒருவர் வழக்கில் வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த டேவிட், “இது வெறும் பணத்திற்கான போராட்டம் அல்ல; நியாயத்திற்கான போராட்டம். என் மீது விழுந்த குற்றவியல் பழி எனது எதிர்கால வேலைவாய்ப்பைப் பாதித்திருக்கும். அதற்குச் சாட்ஜிபிடி மிகச் சரியான வழிகாட்டியாக அமைந்தது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், சட்டரீதியான சிக்கல்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாகச் சார்ந்திருக்கக் கூடாது என்றும், சில சமயங்களில் இதில் தவறான தகவல்கள் வர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.