நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் – மாதேஸ்வரி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பார்த்திபன் இ-சேவை மையம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 24 ஆம் தேதி மதியம் தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் மாதேஸ்வரி பார்த்திபனுக்கு பலமுறை போன் செய்து பார்த்துள்ளார். அவரது போன் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்த மாதேஸ்வரிக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அவரது உறவின் ஒருவர் பார்த்திபன் மோகனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் சடலமாக கிடப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அவர் கணவரின் சடலத்தை பார்த்து கதறியது அங்கு இருப்பவரை கலங்கச் செய்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.