தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்மணி பிரியா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோவை மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்க்கும் ராஜா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. மேலும் பிரியாவுக்கு நீலாம்பூர் ராஜீவ் காந்தி நகரில் பேச்சியம்மாள் என்ற தோழியும் இருக்கிறார்.

இந்நிலையில் தோழியை பார்ப்பதற்காக நேற்று கோவைக்கு வந்த பிரியா ராஜாவையும் சந்தித்து பேசினார். இதனையடுத்து மாலை நேரத்தில் ராஜா பிரியாவை பேச்சியம்மாவின் வீட்டில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் நீலாம்பூர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாவும் பிரியாவும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.