தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரகுமானியாபுரம் ஏழாவது தெருவில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமதுவும் அதே பகுதியைச் சேர்ந்த அகமது(5) என்று சிறுவனும் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த வெறிநாய் இரண்டு சிறுவர்களையும் கடித்து குதறியது. இதனால் படுகாயமடைந்த சிறுவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் கோபமடைந்த சிறுவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே அகமது மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.