தெலுங்குத் திரையுலகில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், கல்யாண்ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை மற்றும் முஹுரத் ஷாட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் முதல் கிளாப் அடிக்க, இந்தத் தொடக்கக் காட்சியைக் கௌரவமாக இயக்குவதற்காக 84 வயதான மூத்த தெலுங்கு இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வரவழைக்கப்பட்டிருந்தார்.

அப்போது, நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் நிற்க வேண்டிய பொசிஷன்களைக் காட்டும் போது, இயக்குனர் ராகவேந்திர ராவ் திடீரென நடிகை கீர்த்தி சுரேஷின் கையைப் பிடித்து இழுப்பதும், பின்னர் கிருத்தி ஷெட்டியை வழிநடத்தும்போது அவரது தோள் மற்றும் கையைப் பிடித்து இழுத்து நிறுத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “பெண்களுக்கு அவர்களின் சம்மதமில்லாமல் இப்படித் தொடுவதற்கு இவருக்கு யார் உரிமை கொடுத்தது? வாயாலேயே சீனைச் சொல்லியிருக்கலாமே, எதற்குத் தேவையில்லாமல் தொட வேண்டும்?” என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரைப் பயங்கரமாகத் திட்டித் தீர்த்து, டிரோல் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், அவர் ஒரு மூத்த இயக்குனர் என்பதால் காட்சியைப் புரிய வைப்பதற்காகவே அப்படிச் செய்தார் என்று அவருக்கு ஆதரவாகவும் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் நடிகை நிஹாரிகா கொனிடேலாவை இவர் இதேபோல் பொதுவெளியில் அநாகரிகமாகத் தொட்டுத் தன் பக்கத்தில் இழுத்த பழைய வீடியோவையும், அதுகுறித்த பழைய சர்ச்சைகளையும் நெட்டிசன்கள் தற்போது மீண்டும் தோண்டி எடுத்து இணையத்தில் பயங்கர ட்ரெண்டாக்கி வருகின்றனர்.