திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாகாளியம்மன் கோவில் அருகே வடிகால் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சியை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் வடிகாலில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குப்பையில் மண்டை ஓடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மண்டை ஓட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பணி நடந்த இடத்திற்கு அருகே சுடுகாடு உள்ளது. எனவே மண்டை ஓட்டினை நாய் எடுத்து வந்து போட்டிருக்கலாம் என்றும், ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் இது போன்ற மண்டை ஓட்டினை நாய் இழுத்து வந்து போட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.