பெங்களூரு ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலையில், புதன்கிழமை மாலை பைக்கில் சென்றுகொண்டிருந்த சுரேஷ் (53) என்ற நிதி நிறுவன ஊழியர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் அவர், கடன் வசூலிக்கச் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றதால், காய்ந்த மரக்கிளை நேரடியாக அவர் தலையில் தாக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து மயங்கிய அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது இது குறித்து ராஜாராஜிநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள காய்ந்த மற்றும் அபாயகரமான மரக்கிளைகளை அகற்றும்படி வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால்தான் சுரேஷின் உயிர் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

“>

 

பெங்களூரு நகரின் பல இடங்களில் இதேபோல் காய்ந்த மரங்கள் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், மீண்டும் இது போன்ற துயரங்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான கிளைகளை அகற்றி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.