ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்..

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது. ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் விரைவு ரயில் மற்றொரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்த 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

7க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பல பயணிகள் உள்ளே சிக்கியுள்ளனர்.. இதையடுத்து ரயில் விபத்து நடந்த பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் 6782 262 286 அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.. தொடர்ந்து மீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன..