ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் உள்ள சண்டீர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர் பாம்புகளைப் பிடித்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர் மக்களால் விஷத்தன்மை கொண்டவர் என்று அழைக்கப்பட்ட இவருக்குப் பாம்புகளுடன் வித்தை காட்டுவது ஒரு பொழுதுபோக்காக இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஊரின் மயானப் பகுதியில் ஒரு கொடிய விஷம் கொண்ட கோப்ரா பாம்பு தென்பட்டது. தகவலறிந்த ராஜேந்திரா உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அந்தப் பாம்பைப் பிடித்துள்ளார். அப்போது அவர் லேசான போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

பிடிபட்ட பாம்பை அவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அதன் தலையைத் தனது வாய்க்குள் வைத்து வித்தை காட்டியபோது அந்தப் பாம்பு அவரைத் தாக்கியது. பாம்பு கடித்த பின்பும் அதனை விடாமல் ராஜேந்திரா வித்தை காட்டிய நிலையில் சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்தது. பாம்பு கடித்த இருபது நிமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராஜேந்திரா இதற்கு முன்பும் பலமுறை பாம்புகளைப் பிடித்து விளையாடியுள்ளதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பாம்பு பிடி நிபுணர் சதீஷ் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்துச் சென்றார்.

பொழுதுபோக்கிற்காகப் பாம்புகளுடன் விளையாடிய நபரின் உயிர் பிரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.