இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல்  நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ஜெகன் (38).  இவருக்கு அனிதா (32) என்ற மனைவியும், காவ்யா (11) என்ற மகளும், நவ்தீஷ் (9) என்ற மகனும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் சேர்ந்து இடுவாய் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜெகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஜெகன் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதில், கோபத்தில் வீட்டில் இருந்து அவர் வெளியே சென்றுவிட்டார்.

பின்னர் தென்னை மரத்திற்கு வைத்திருக்கும் விஷ மாத்திரையை மதுவில் கலந்து குடித்துள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் இந்த தகவல் தெரிவித்து விட்டு, மயங்கியுள்ளார். அவருடைய நண்பர்களும், மங்கலம் போலீசாரும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, பின் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த ஜெகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.