சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதே பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷும், ஸ்ரீகாந்தும் சுந்தரபுரம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி இருவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடலோர காவல் படையினர் மற்றும் போலீசாரின் உதவியுடன் 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.