மராட்டியத்தில் மும்பை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரிலிருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். அதோடு வருகிற 30-ஆம் தேதியன்று நடிகர் சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பரபரப்படைந்த மும்பை காவல்துறையினர், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தானே மாவட்டத்திலுள்ள சஹாபூர் பகுதியில் இருந்து அழைப்பு வந்திருப்பது தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது மிரட்டல் விடுத்தது 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அச்சிறுவனை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.