கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரேஷ்மி(33) செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில மணி நேரத்திலேயே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி ரேஷ்மி உயிரிழந்தார். மேலும் அதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கும் மேல் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த செவிலியர் பிரியாணி சாப்பிட்ட உணவகத்திற்கு சென்று சோதனை செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் அந்த உணவு விஷமானதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோட்டயத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சோதனை நடத்த சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 429 உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதில் 43 நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 44 உணவகங்களில் இருந்து உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி வரும் நாட்களில் ஆய்வுகள் தொடரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.